Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 28


கீதையில் சில சொற்றொடர்கள் - 28

बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन ... (अध्याय ४ - श्लोक ५).
பஹூநி மே வ்யதீதாநி  ஜன்மாநி தவ  சார்ஜுன  .. (அத்யாயம்  4  - ஶ்லோகம் 5).
Bahooni Me Vyateetaani Janmaani Tava Chaarjuna ..  (Chapter 4 - Shloka 5).

அர்தம் :  நான்  பல  ஜன்மங்களைக்  கழித்துள்ளேன்.  நீயும் தான்.  நான்  அவை அனைத்தையும்  அறிவேன்.  நீ அறியவில்லை.

இது ஸ்ரீ க்ருஷ்ணன் புனர் - ஜன்மத்தைப் பற்றி  செய்திடும் அத்புதமான  ஒரு முழக்கம்.  மனுஷ்ய வாழ்க்கையைப் பார்த்திடும் இரண்டு கண்ணோட்டங்கள் உள்ளன.  ஒன்று :  இது முதலும் கடைசியும் ஆன 'ஒரே' வாழ்க்கை.  ஜனனத்துடன் தொடங்குகிறது.  மரணத்துடன் முடிவுறுகிறது.  (தாயின் கர்பத்தில் கழித்த காலத்தை எவ்வாறு  கணக்கில் எடுப்பது?)  இந்தக் கண்ணோட்டம் வாழ்வினை ஒரு நேர்க்கோடாகப் பார்க்கிறது, ஆதியும் அந்தமும் கொண்ட, துவக்கமும் முடிவும் கொண்ட நேர்க்கோடு.  இரண்டு :  இந்தக் கண்ணோட்டம் வாழ்க்கையை வட்டமாக, மீண்டும் மீண்டும் நிகழும் சுழற்சியாக, ஆதியும் அந்தமும் அற்ற சுழற்சியாகப் பார்க்கிறது.  வாழ்க்கை மாத்ரம் இல்லை, படைப்பில் உள்ள  அனைத்தும் சுழற்சியே.  நாம் பார்க்கும், நாம் அநுபவித்திடும் பல்வேறு துவக்கங்களும் முடிவுகளும் தத்காலிகம் ஆனவையே.  மீண்டும் புதிதாக வர உள்ள ஒரு சுழற்சியின் அடையாளங்களே.

ஹிந்துக்களான நாம் அனைத்தையும், ஏன் படைப்பு முழுவதையும் ஒரு சுழற்சியாகவே காண்கிறோம்.  வரும் போகும்.  வந்தவை போகும்.  போனவை வரும்.  நிகழ்வுகள் - விபத்துக்கள் வரும், போகும்.  காலங்கள் - ஶீதோஷ்ண சூழ்நிலைகள் வரும், போகும்.  ஸுகம் - து:கம் வரும், போகும்.   ஜீவன்களும்  வரும், போகும்.  ஜனனம் வாழ்வின் துவக்கமும் இல்லை.  மரணம் வாழ்க்கையின் முடிவும் இல்லை.  (நாம் ஜனனம் என்று எந்தத்  தருணத்தைச் சொல்லலாம்?  ஜீவன் தாயின் கர்பத்தில் இருந்து வெளியேறிய தருணத்தையா?  கர்பத்தில் ஹ்ருதயத் துடிப்பு துவங்கிய அந்தத் தருணத்தையா?  ஆண் அணுவும் பெண் அணுவும் இணைந்து, இந்த ஶிஶு உத்பத்திக்குக் காரணமான அந்தத் தருணத்தைச் சொல்வதா?  அல்லது ஒரு குழந்தை வேண்டும் என்று பெற்றோர் மனங்களில் காமம் உதித்த அந்தத் தருணத்தைச் சொல்வதா?).  வாழ்வதற்குப் பெரும் ஆற்றல் வேண்டும்.  கர்மங்கள் செய்திட ஆற்றல், பொருட்களை ஈட்டிட ஆற்றல், செலவழித்திட ஆற்றல், அவற்றில் இருந்து தேவையானதை கொள்ள ஆற்றல், வேண்டாடதைத் தள்ளிட ஆற்றல், ஹ்ருதயம் துடித்திட ஆற்றல், மூச்சு இழுத்திட ஆற்றல், ஸுரப்பிகள் ஸுரந்திட ஆற்றல், அநுபவித்திட ஆற்றல், மகிழ்ந்திட ஆற்றல், ஏன்? சிந்திக்கவும் ஆற்றல் வேண்டும்.  நம் சிந்தனையில் இந்த ஆற்றலை ப்ராணன் என்கிறோம்.  நம் உடலின் பல்வேறு கார்யங்களைச் செய்பவை ஐந்து வகை ஆற்றல்கள்.  (பஞ்ச- ப்ராணன்)  உணவு உட்கொள்ளும் முன் நாம் செய்திடும் பரிஶேஷணத்தில் நாம் இவ்வைந்து ப்ராணன்களுக்கு ஆஹுதி அளிக்கிறோம்.  (ப்ராணாய ஸ்வாஹா, அபானாய ஸ்வாஹா, ....)

ஶூந்யத்தில் இருந்து ஆற்றலை உருவாக்க  அல்லவா?  அதே போல, ஆற்றல் சும்மா ஶூந்யத்தினுள் மறைந்து விடாது.  ஆற்றல் தொடர்ந்து இருந்திடும்.  வேறு ரூபத்தில் உரு மாறலாம்.  ஆற்றலின் மூலம் (Source) என்றும் வற்றாததாக, நித்யம் பூர்ணமானதாக இருந்தாக வேண்டும்.  கீதையில் (அத்யாயம் 2 - ஶ்லோகம் 70) இதைப் பற்றி விளக்குகையில் ஸமுத்ரத்தின் உபமானம் அளிக்கிறார்.  "பல நதிகள் வந்து கலந்தாலும், ஸமுத்ரம் வழிந்தோடுவதில்லை.  தொடர்ந்து ஸூர்யனால் காய்க்கப் பட்டு நீர் ஆவியாக, மேகங்களாக மாற்றப் பட்டாலும் வற்றி விடுவதில்லை.  அதே போல, அவனும்.  அவன் பூர்ணமானவன்.  அவனில் இருந்து அனைத்து ஜீவன்களும் படைக்கப் படுகின்றன.  அவனில் மீண்டும் இணைகின்றன.  அவன் நித்யமும் பூர்ணமாகவே இருக்கிறான்."

சில குழந்தைகள் அங்க ஹீனத்துடன் பிறக்கின்றன.  நோயுடன் பிறக்கின்றன.  காரணம் - விளைவு என்ற ஜட  கொள்கையால் இதை விளக்க முடியாது.  தாய் தந்தையரிடம் இருந்து வந்தவை இந்த உடற்கோளாறுகள் என்று சிலர் வாதம் புரியலாம்.  ஒரு வரம்பிற்குள் அவர்களது வாதம் ஸரியாகவும் இருக்கலாம்.  ஆனால், தாய் தந்தையரிடம் காணப்படாத கொடுமையான நோய்களுடனும் விசித்ரமான அங்க-ஹீனங்களுடனும் பிறந்திடும் குழந்தைகள்?  விஞானம் இவற்றை விளக்கிடத் தடுமாறுகிறது.

நான் பள்ளி மாணவனாக இருந்த போது நாக்பூரில் ஒரு விசித்ரமான ஸம்பவம் நிகழ்ந்தது.  வடக்கு நாக்பூரில் ஒரு குடிஸைப் பகுதியில் வஸித்து வந்த, பள்ளி கல்லூரிகளிக்கு செல்லாத, விதர்பாவின் ஸீமையைக் கடந்திடாத  ஒரு இளம் தாய், ஒரு நாள் திடீர் என்று பரவஶ நிலையில் பெங்காலீ  பேசத் தொடங்கினாள்.  இந்த அநுபவம் ஒரு பக்ஷத்திற்கு ஒரு முறை (பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை) நிகழ்ந்தது.  ஒவ்வொரு முறையும் ஓரிரு மணி நேரங்கள் நிலைக்கும்.  அவள் வர்ணித்த க்ராமச் சூழ்நிலை நாக்பூரிலோ விதர்பாவிலோ காணப்படாத ஒன்று.  மர்மத்தை அறிந்திட அப்பெண்ணின் உறவினர்கள் பெங்காலிற்குச் சென்று வந்தனர்.  ஆனால், பணப் பற்றாக்குறை என்ற தடங்கல் முன் அவர்களின் முயற்சி முடங்கியது.

ஸ்ரீ ரவி கிரண் கோட்டு வாத்யம் (வீணை போன்றதொரு கருவி) வாஸித்திடும் ஒரு ப்ரபல  ஸங்கீத வித்வான்.  ஸ்ரீ வருண் அமெரிக்காவில் வஸித்து, வர்ஷம் தோறும் ஸங்கீத ஸீஸனில் சென்னைக்குப் பாட வரும் இளம் வித்வான்.  (என் மாமா மகன் ஸ்ரீ ஶேகர் கணேஶனின் புதல்வன்- https://www.facebook.com/sekar.ganesan.60?ref=br_rs)  இவ்விரு ஸங்கீத வித்வான்களும் தம் சிறு வயஸில் (மூன்று வயஸில்) மேடை ஏறி இருக்கின்றனர், ஆனால் வித்யாஸமான வகையில்.  எதிரில் ஶ்ரோதாவாக (audience) ப்ரபல ஸங்கீத வித்வான்கள்.  மேடையின் மேல் மூன்று வயஸுக் குழந்தை.  முறையான ஸங்கீதப் பயிற்சி எதுவும் இல்லாத குழந்தை.  வித்வான்கள் ஒருவர் பின் மற்றொருவர் ஒவ்வொரு ராகத்தைப் பாடினர்.  மேடையில் அமர்ந்திருக்கும் குழந்தை ராகங்களை அடையாளம் கண்டு பெயர்களைச் சொல்லின.  (ஸ்ரீ ரவி கிரண் விஷயம் நான் கேள்விப் பட்டது.  ஸ்ரீ வருண் நிகழ்த்திய அந்நிகழ்ச்சியின் வீடியோ நான் கண்டது.)  பல ராகங்களை குழந்தை சட்டென்று ஓரிரு க்ஷணங்களில் கூறியது.  இது ஒரு மர்மமாகத் தோன்றலாம்.  புனர்-ஜன்மம் என்ற தத்தவத்தின் அடிப்படையில் மட்டுமே இதை விளக்கிடலாம்.  அவர்களது கடந்த வாழ்க்கையில் இருந்து அவர்கள் கொண்டு வந்த திறமைகள் இவை.

ஸ்ரீ ஸ்ரீதர் பாஸ்கர வர்ணேகர் என்ற ப்ரபல ஸம்ஸ்க்ருத கவிஞர் தன் எழுபதாம் வயஸில் ஸங்கீதம் பயிலத் தொடங்கினார்.  "நிகழக்கூடிய மரணத்தினால் பயிற்சி தடைப்பட்டு விடுமே?" என்று கேட்கப்பட்ட போது, "அடுத்த ஜன்மத்தில் பயிற்சியைத் தொடருவேன்" என்றார்.  புனர்ஜன்மம் என்ற ஶ்ரத்தை வாழ்வில் நமக்குப் பெரும் ஊக்கம் அளிக்க வல்லது.

மனுஷ்யன் குறுகிய பார்வை கொண்டவன்.  அறிந்து கொள்ளும், புரிந்து கொள்ளும் அவனது ஆற்றலும் குறுகியது.  அன்பானவரின் மரணத்தை அவனால் புரிந்து கொள்ள முடிவதில்லை.  ஏற்றுக் கொள்ளவும் முடிவதில்லை.  "ஊக்கமும் உத்ஸாஹமும் உயிரோட்டமும் நிறைந்து காணப்பட்ட இவருக்கு என்ன நிகழ்ந்தது?  எங்கே சென்று விட்டார்?" என்ற கேள்விகளில் மூழ்குகிறான்.  இரண்டு அநுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.  ஒன்று தென் ஆப்ரிக்காவில் ஸ்ரீ ஸதீஶ் கோமலால் பகிரப்பட்டது.  "வெள்ளைக்கார தம்பதி ஒன்று தம் நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர்.  அவர்களது கடைஸி மகள், ஐந்து வயஸு சிறுமி, திடீர் என்று இறந்து போனாள், அதுவும் தந்தையின் வண்டிச் சக்ரத்தின் கீழ் நசுக்கப்பட்டு.  தந்தையால் இந்த மரணத்தை, புரிந்து கொள்ள முடியவில்லை. ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.  மன உளைச்சலுக்கும் மனத்தளர்விற்கும் ஆளானார்.  இயல்பு வாழ்க்கைக்கு அவரால் திரும்ப முடியவில்லை.  ஒரு வெள்ளைக்கார மூதாட்டியிடம் அழைத்துச் செல்லப் பட்டார்.  "உங்கள் குழந்தையுடன் பேச வேண்டுமா?"  அவரிடம் கேட்டாள் மூதாட்டி.  இவருக்கு ஆஶ்சர்யம் கலந்த ஸந்தேஹம்.  சில க்ஷணங்களின் மௌனத்திற்குப் பிறகு குழந்தையின் குரல் கேட்டது.  தந்தை பரபரப்பானார்.  "என்னைத் தெரிகிறதா?  நான் உன் தந்தை." என்றார்.  " ஆம். இம்முறை நான் உன் மூலம் வந்தேன்.  பல முறை பலர் மூலம் வந்திருக்கிறேன்.  நான் என் பாதையில் சென்று கொண்டிருக்கிறேன்.  என்னைப் பிடித்தெழுத்து தடங்கல் செய்யாதே" என்று பதில் சொன்னது குழந்தையின் அக்குரல்.  இவருக்குப் புரியவில்லை என்றாலும் ஸஹஜ நிலைக்குத் திரும்பி விட்டார்.  புனர்-ஜன்மம் பற்றி என்னிடம் அறிய விரும்பினார்.

மற்றது நம் நாட்டில் ஹ்ருஷீகேஶத்தில் நிகழ்ந்தது.  அங்கு ஒரு வயஸு முதிர்ந்த பெண் ஸந்யாஸீயை ஸந்தித்தேன்.  ஐம்பது வர்ஷங்கள் முன்னர் இரட்டை மகன்களுக்குத் தாயான அவள் ஹ்ருஷீகேஶத்திற்கு வந்திருந்தாள்.  கங்கை அவளது இரண்டு மகன்களையும் அடித்துச் சென்று விட்டது.  துயரத்தில் ஆழ்ந்தாள் அவள்.  மயக்கமும் வலிப்பும் அவளைத் தாக்கின.  உணவை மறுத்தாள்.  கீதா தாம் என்ற ஆஶ்ரமத்தில் வாழ்ந்த ஸ்ரீ ஜயதயாள் கோயன்கா என்ற பெரியவரிடம் அழைத்துச் செல்லப் பட்டார்.  அங்கு அவளுக்குக் கிடைத்த அநுபவமும் தென் ஆப்ரிக்காவில் வெள்ளைக் காரனுக்குக் கிடைத்த அநுபவமும் ஒரே போன்றது.  அவள் மனம் அமைதி அடைந்தது.  அவள் ஸந்யாஸத்தை ஏற்று, அங்கே தங்கி விட்டாள்.  ஸ்ரீமத் பாகவதத்தில் இத்தகைய ஒரு ஸம்பவம் வர்ணிக்கப் படுகிறது.  புனர்-ஜன்மம் என்ற ஶ்ரத்தை, மரணத்தினால் துயரத்தில் ஆழ்ந்த மனஸிற்கு ஹிதம் அளிக்கவல்லது.  அமைதி அளிக்க வல்லது.  "ஆம்.  அவள் / அவர் விட்டார் என்பது உண்மைதான்.  ஆனால், மீண்டும் நம் குடும்பத்தில் வந்து பிறந்திடுவார்".  இந்த ஶ்ரத்தை உண்மையாகலாம்.  உண்மையாகாமல் போகலாம்.  ஆனால், அத்தருணத்தில் பெரும் ஆறுதல் அளிக்கவல்லது.  அன்பானவரின் மரணத்தை ஏற்றுக் கொள்ள உதவி செய்வது.

"நாம் இருவரும் இங்கு பலமுறை வந்திருக்கிறோம்.  நான் அவற்றை அறிவேன்.  நீ அறியவில்லை".  என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  தென் பாரதத்தில் ஸ்ரீ  கோவில்களில் ஒரு வழக்கம் இருக்கிறது.  கோவிலுக்கு வரும் பக்தர்களின் ஶிரஸ்ஸில் தாம்ரத்தினால் ஆன மகுடம் போன்ற ஒன்று வைக்கப் படும்.  அது ஷடாரி   எனப்படுகிறது.  ஷட -த்தை கொல்வது அல்லது அழித்திடுவது.  (அரி என்றால் கொல்வது.)  ஷட என்பது நம் ஶிரஸை சுற்றி ஒரு திரையாம்.  அது நம் கடந்த ஜன்மங்களை அறிந்து விடாமல் நம்மைத் தடுப்பது.  ஆயிரத்து ஐந்நூறு வர்ஷங்கள் முன் வாழ்ந்த வைஷ்ணவ ஸாது ஸ்ரீ ராமானுஜர் இந்த ஷட -த்தை நோக்கிக் கோபப்பட்டாராம்.  அது விலகி விட்டதாம்.  அவருக்குத் தன் பூர்வ ஜன்மங்கள் நினைவிற்கு வந்து விட்டன.  தத்க்ஷணமே ஞானமும் வைராக்யமும் கிடைத்து விட்டது.  தன் நிஜ ஸ்வரூபத்தை அறிந்து கொண்டார்.  அதனால் தான் அவருக்கு ஷட -கோபன் என்ற பெயரும் உண்டு.  (Shata -Kopan - षट कोप ).  (தமிழில் பல ஶப்தங்கலுக்கு ஏற்ற எழுத்துக்கள் இல்லாத குறையினால் இன்று அந்தப் பெயர் சடகோபன்/ SadaGopan என்று வழங்கி வருகிறது.)  ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கையையே மாற்றி அமைத்த இந்நிகழ்வு இன்று வைஷ்ணவக் கோவில்களில் வெறும் ஒரு ஷடங்காகி நின்று விட்டது.  நம் தலையின் மேல் ஷடாரி வைத்திடும் பூஜாரி மனஸிலும் நாம் உன்னத நிலை எய்திட வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.  பக்தனாக வேஷம் இட்டுக் கோவிலுக்கு வரும் நம் உள்ளங்களிலும் நாம் "அறிந்திட வேண்டும், பேறு பெற்றிட வேண்டும்" என்ற அவா கிடையாது.  எல்லோரும் வாழ்க்கையின் மர்மத்தை அறிந்து, ஞானம் பெற்று விட்டால்?  உலகம் நடந்திடாதே.  கவர்ச்சிகள் நிறைந்த பளபளப்பான இந்த உலகம், பரபரப்பான கர்மங்கள் நிறைந்த இந்த உலகம் தொடர்ந்திட வேண்டும் அல்லவா?  ஷட என்றத் திரை, அறியாமைத் திரை, உலக வாழ்க்கையைப் பாதுகாத்திடவே படைக்கப் பட்டிருக்கிறதோ?  யார் அறிவார்???

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

पतञ्जलि योग सूत्र - १

ॐ पतञ्जलि योग सूत्र (अष्टाङ्ग योग) [ ट्विटर पर मेरे लिखे नोट ] {- १ -}: पतञ्जलि योग सूत्र मे ४ पाद हैं | ४ पाद मिलाकर १ पूर्ण होता है | समाधि पाद, साधन पाद, विभूति पाद एवम् कैवल्य पाद | {- २ -}: पतञ्जलि योग सूत्र मे १९५ सूत्र हैं | ये श्लोक रूप मे न होकर सूत्र रूप मे हैं | {- ३ -}: पतन्जलि योग सूत्र -- समाधि पाद मे ५१, साधन पाद मे ५५, विभूति पाद मे ५५ और कैवल्य पाद मे ३४ सूत्र हैं | एकुण १९५ सूत्र | {- ४ -}: श्री पतञ्जलि योग के ८ अङ्ग बताते हैं | यम, नियम आसन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समाधि योग के ८ अङ्ग हैं | {- ५ -}: यम नियमासन प्राणायाम प्रत्याहार धारणा ध्यान समधयो(s)ष्टावङ्गानि - {साधन पाद - २९} {- ६ -}: पहली बात यह है की यह "योगा " नहीं , "योग " है | अङ्ग्रेजी चष्मा को हटा लें | अपने विषयों को अपने ही आंखों से देखें | योगा नहीं योग | {- ७ -}: महर्षी पतञ्जलि की विशेषता - एक सूत्र कहते और उसमे प्रयोग किया गया प्रत्येक शब्द को एकेक सूत्र मे समझाते | {- ८ -}: योगश्चित्त वृत्ति निरोधः - चित्त की वृत्तियां रुक ...