Skip to main content

மரணம் ...சில சிந்தனைகள்.

\
மரணம் ...சில சிந்தனைகள்

(ஒரு உயிர் பிரிந்த முதல் சில நாட்களில் அந்த இல்லத்தில் மரணம் என்ற விஷயம் சிந்திக்கப் பட வேண்டும், என்பது என் கருத்து. எனது மைத்துனர் ஸ்ரீ ஸ்ரீனிவாஸனின் இல்லத்தில் அவரது ஸஹோதரரும் எனது மற்றொரு மைத்துனருமான ஸ்ரீ கஸ்தூரி ரங்கனின்  மரணம் நிகழ்ந்த முதல் சில நாட்களில் எழுதப் பட்டது.)

ஸமீபத்தில் மத்ய மந்த்ரி ஸ்ரீ கோபிநாத் முண்டே ஒரு சாலை விபத்தில் மாண்டார். சில மணி நேரங்கள் முன்னர்தான், முதல் நாள் இரவு பத்ரிகையாளர்களைச் சந்தித்து க்ராம வளர்ச்சித் துறை சார்பான பல திட்டங்களை உத்ஸாஹமாக அறிவித்துக் கொண்டிருந்தார். அவர் உயிரைப் பறித்து எடுத்துச் செல்ல அவரது வீட்டு வாசற்படியில் யமதேவன் நின்று கொண்டிருப்பதை அவரோ சுற்றி இருந்த மற்ற எவரோ அறியிலர். 'இது எதிர்பாராதது'; 'அதிர்ச்சி அளித்திடும் மாபெரும் கொடுமை'; 'நாட்டிற்கு ஒரு மாபெரும் இழப்பு'; 'நாடே இருண்டு விட்டது'; இவை இத்தருணங்களில் மரணத்தைக் கண்டித்து ஸாமான்யமாக வெளியிடப் படும் அறிக்கைகள். ஆம். மரணம் எதிர்பாராததுதான். திடீர் என்று நிகழ்வதுதான். எனவே அதிர்ச்சி அளிப்பது. ஆனால், நமது அறியாமையில் மரணம் திடீர் என்று, முன்னறிவிப்பில்லாமல் வருகிறது என்று கருதுகிறோம். மரணம்தான் படைப்பின் முதல் நாள் அன்றே செய்யப்பட்ட அறிவிப்பு. உரத்த அறிவிப்பு. பட்டவர்த்தனமான அறிவிப்பு. ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுஹ் (பிறந்தவை அனைத்தும் இறந்தே தீரும்.) என்பது கீதையின் அறிவிப்பு. ஒரு குழந்தை பிறக்கும் போது, அதன் வாழ்வில் நிகழப் போகிற எதுவும் நிச்சயம் இல்லை. மரணம் நிகழப் போகிறது என்பது மாத்ரமே நிச்சயம். உலகம் மற்றும் கவர்ச்சிகரமான உலக வாழ்க்கையின் மீது உள்ள பற்றின் காரணமாக இந்த அறிவிப்பிற்கு நம் காதுகள் செவிடாகி விடுகின்றன.
நான் ஆறாம் வகுப்பில் படிக்கும் பொழுது எனக்கு மரணத்தைப் பற்றிய முதல் அனுபவம் கிடைத்தது. நாக்பூரில் ஸரஸ்வதி வித்யாலயத்தில் ஆசிரியையாக பணி  புரிந்த என் அத்தையும் உடன் பணி புரிந்த திருமதி பட்டு என்பவளும் தம் வகுப்பு மாணவர்களை ராம்டெக் என்ற ஊருக்கு சுற்றுலா அழைத்துச் சென்றிருந்தனர். ஏரியில் குளிக்கும் ஆர்வத்தில் இவ்விருவரும் மற்றவர்களிடம் இருந்து விலகிச்  சென்றனர். பட்டு ஆசிரியை ஏரியில் மூழ்கினாள். (இத்தகைய விபத்துக்கள் பலவும் கட்டுப்பாட்டை மீறுவதால்தான் ஏற்படுகின்றன.) ஏரிக்கரையில் நின்றபடி இயலாமையுடன் அக்காட்சியைப் பார்த்த என் அத்தை அன்று இரவு வீங்கிய முகமும் சிவந்த கண்களும், அடைத்திருந்த குரலும் அடிக்கடி பீறிட்டு எழும் அழுகையும் புலம்பலுமாக வீடு திரும்பினாள். எனக்கு அவள் மீது பரிவு ஏற்பட்டாலும் அவளது சோகம் வெளிப்படுவதை கவனிக்கும் ஆர்வமும் தோன்றியது. என் பால மனசில் பல்வேறு சந்தேஹங்கள் எழுந்தன. 'மரணம் என்பது என்ன?'; 'அது வலியும் வேதனையும் மிகுந்ததா?'; 'அது எல்லோருக்கும் நிகழ்வதல்லவா?'; (ஆங்கில பாட புஸ்தகத்தில் மரணம் நிகழாத ஒரு வீட்டில் இருந்து அரிசி வாங்கி வரச் சொன்ன கௌதம புத்தரின் கதையை நான் படித்திருந்தேன்.) 'அனைவருக்கும் மரணம் நிகழும் என்றால் என் அத்தை அழுவது ஏன்?' மரணத்தைப் பார்த்து விட்டதாலா?'; 'சஹஆசிரியரின் மரணத்தைத் தடுக்க இயலாததாலா?'; ஓரு சில நாட்களில் அவளது கண்ணீர் வற்றியதையும் சோகம் வடிந்து விட்டதையும் கவனித்தேன். பின், "சோகம் உண்மையானதில்லையா?" என்ற கேள்வியும் எழுந்தது. 'சோகம் உண்மையானது இல்லை. நிரந்தரமானதும் இல்லை. தாற்காலிகமானதே.' என்ற முடிவிற்கு வந்தேன். இந்த அனுபவம் என் மனஸில்  ஆழமாகப் பதிந்தது. மரணத்தை அறிய வேண்டும் மற்றும் காண வேண்டும் என்ற ஆர்வம் என் மனஸில்  பல வர்ஷங்கள் உயிருடன் இருந்தது.
மரணத்தினை முன்கூட்டியே கணிக்க இயலாது. நிச்சயமானது என்றாலும் எக்கணத்தில் நிகழும் என்பது நிச்சயமில்லை. மிகக் கடுமையான அறிகுறிகளைப் பார்த்து விட்டு, கூடிய சீக்கிரம் மரணம் நிகழ்ந்து விடும் என்று தோன்றலாம். ஆனால், விதிக்கப்பட்ட நேரத்தில்தான் மரணம் நிகழும். மிகக் கடுமையான அறிகுறிகளில் இருந்து தப்பிய உயிர், தருணம் வந்தால் மிக அற்பமான காரணத்தால் பிரிந்து விடும். நான் எட்டாவது அல்லது ஒன்பதாம் வகுப்பில் இருந்த போது  தீபாவளி விடுமுறையில் ஜபல்பூரில் இருந்த என் சித்தப்பா வீட்டிற்குச்  சென்றேன். மிகக் கடுமையான ஆஸ்த்மா நோயால் பாதிக்கப் பட்டவர் அவர். முதுகினை மிதித்தால் அவரது வேதனையின் கடுமை குறையும். எனவே, அவர் முதுகுன் மேல் ஏறி நின்று மிதிப்பது என் நித்யக் கடமையானது. ஓரிரு மணி நேரத்தில் என்னைப் படுக்கச் சொல்வார். படுத்து விட்டாலும், நான் விழித்திருந்து சத்தத்துடன் கூடிய, ஸ்ரமத்துடன் கூடிய அவரது மூச்சினை கவனித்தபடி இருப்பேன், அவரைச் சுற்றி வட்டமிடுவதாக எனக்குத் தோன்றிய அவரது மரணத்தைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்துடன். வாழ்நாள் முழுவதும் மரணத்திற்கு எதிராக அவர் நிகழ்த்திய போராட்டம் ஏழு வர்ஷங்கள் பின்னரே முடிந்தது.
உயிரை எடுத்துச் செல்ல கால தேவனிடம் வியக்கத்தக்க வழிகள் உண்டு. வேடிக்கையான ஒரு கதை உண்டு. குருவி ஒன்று ஒரு மரத்தின் மீது அமர்ந்திருந்தது. அவ்வழியே சென்ற யம தூதர்களில் ஒருவன், 'ஐந்து நிமிஷங்கள் கழித்து இக்குருவியின் உயிரை எடுக்க வர வேண்டும்' என்று கூறியதை அக்குருவி கேட்டு விடுகிறது. பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த அக்குருவியை ஒரு பருந்து மிகத்தொலைவில் இருந்த ஹிமய மலையின் குஹை ஒன்றில் பாதுகாப்பாக ஒளித்து வைத்து விடுகிறது. குருவியைக் காப்பாற்றி விட்டேன் என்ற பெருமிதத்துடன் குஹையை விட்டு வெளியேறிய பருந்து யமதூதர்கள் இருவர் அக்குஹையினுள் நுழைவதைக் காண்கிறது. 'காலதேவன் குருவியின் உயிரை எடுக்க நம்மிடம் கொடுத்த இடம் இந்த குஹை. ஆனால் அக்குருவியோ ஐந்து நிமிஷங்களில் இவ்விடத்திற்குப் பறந்து வர முடியாத தூரத்தில் இருந்தது. யமனின் வார்த்தைப் பொய்த்து விடுமோ?' என்று ஸந்தேஹம் எழுப்பினான் ஒருவன். நம் கடமையை நாம் செய்வோம் என்றான் மற்றவன். பருந்தின் உதவியால் க்ஷணம் தவறாமல் அக்குருவியின் மரணம் நிகழ்ந்தது. என் தாத்தாவை ஆஸ்பத்திரியில் சேர்த்த போது நானும் என் ஸஹோதரன் ஒருவனும் உடன் சென்றோம். இவர் உயிருடன் வீடு திரும்ப மாட்டார் என்று என் உள்மனம் கூறியதை பக்கத்து வீட்டு நண்பனிடம் கூறினேனாம், பல வர்ஷங்கள் கழித்து அவன் நினைவு கூருகிறான். எனக்கு அது நினைவு இல்லை என்றாலும் அன்றைய இரவின் அனுபவம் மனதை விட்டு அகலவில்லை. தாத்தா அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார். மார்ச்சளியை உறிஞ்சு எடுக்க அவர் தொண்டையில் குழாய் ஒன்று சொருகப் பட்டது. கலகலகல என்ற அதன் சத்தம் அவர் மூச்சின் ஒலியுடன் சேர்ந்து விசித்ரமான சத்தம் எழுப்பியது. இவரது மரணத்தின் அத்தருணத்தை நழுவ விடக் கூடாது என்ற உறுதியுடன் நான் பிடிவாதமாக விழித்திருந்தேன். இரண்டு மணி சுமாருக்கு மூச்சு அடைப்பதைப் போன்ற ஒரு உணர்வு என்னுள் ஏற்பட்டது. வெளி வராண்டாவில் நல்லக் காற்றை மூச்சிழுத்து விட்டு ஒரு நிமிஷ நேரத்திற்குள் அறையினுள் திரும்பி விட்டேன். அந்தச் சத்தம் ஓய்ந்திருந்தது. "யமன் என்னை ஏமாற்றி விட்டான், என்னை விலக்கி விட்டு, அந்த சில கணங்களில் அறையினுள் நுழைந்து தாத்தாவின் உயிரைப் பறித்து எடுத்துச் சென்று விட்டான்."  என்று நினைத்தேன். ஆணவம் நிறைந்த இளமை இத்தகைய எண்ணத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம். வாழ்வில் வளர வளர, "யமன் எல்லையிலா ஷக்தி கொண்டவன். உயிரைச் சுற்றி நாம் எழுப்பிடும் அனைத்து பாதுகாப்பு கோட்டைகளையும் தகர்த்து விட்டு தான் விரும்பும் உயிரை எடுத்துச் செல்வான்" என்ற உண்மையை உணர்ந்தேன்.
நாம் இவ்வுலகில் வருவதும் தனியாக. இங்கிருந்து வெளியேறுவது தனியாக. இவ்விரு தருணங்களில் வேறு எவரும் நமக்குத் துணை வர முடியாது. இவ்விரண்டு நிகழ்வுகளுக்கு இடையில் நாம் மாபெரும் மூட்டையைச் சேகரிக்கிறோம். மனிதர்களைச் சேகரிக்கிறோம் அறிமுகம், நட்பு மற்றும் உறவுகள் மூலம். பலவித பொருட்களையும், பணம், நிலம், வீடு போன்ற சொத்துக்களையும் சேகரிக்கிறோம். புகழ், அதிகாரம், செல்வாக்கு, போன்ற கண்களுக்குப் புலப்படாத விஷயங்களைச் சேகரிக்கிறோம். நாம் தனி என்ற கசப்பான உண்மையை, நம் கண் முன்னால் தாண்டவம் ஆடும் உண்மையை மறுத்திட,மறந்து விடவே இத்தகு வீணான முயற்சிகளில் (குப்பைகளைச் சேகரிக்கும் வெற்று முயற்சிகளில்) வாழ்க்கையினை வீணடிக்கிறோம். ஜபல்பூர் சித்தப்பாவைக் காணச் சென்றபோது ஏற்பட்ட ஒரு அனுபவம் என்றென்றும் மறக்க இயலாதது. நான் பயணித்த பஸ் கரை புரண்டு ஓடும் இரண்டு வாய்க்கால்களுக்கு நடுவே நின்றது. நள்ளிரவு நேரம். வெளியே கும்மிருட்டு. அனைவரும் சிறு சிறு குழுக்களாகி அரட்டை, புகைப் பிடித்தல், தீ மூட்டி வெப்பம் ஊட்டிக் கொள்ளல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர். நான் சிறு தூரம் காட்டினுள் நடந்து சென்றேன். திடீர் என்று "நான் தனி" என்ற உணர்வு மின்னலைப் போல என்னுள் இறங்கியது. இது பிறரிடம் இருந்து பிரிந்து நின்ற தனிமை இல்லை. ஏனென்றால் சுற்றுப்புறத்தினை, என் பேருந்தினை, மற்ற பயணிகளை, ஏன்? என் உடலையும் கூட மறந்து விட்டிருந்தேன். இந்த அனுபவம் பயம் தரவில்லை. ஆனந்தமும் அளிக்கவில்லை. நிகழ்ந்தது. அவ்வளவே. எவ்வளவு நேரம் நீடித்தது? நான் அறியேன். சில க்ஷணங்களே இருந்திருக்க வேண்டும். ஜபல்பூர் வரை தொடர்ந்த பஸ் பயணம் சொற்களால் வர்ணிக்க முடியாமல் வேறு விதமாக இருந்தது. நான் தனி என்ற இந்த உணர்வு கூட்டத்தின் மத்தியில் இருந்தும் கூட்டத்தினரால் பாதிக்கப் படாத ஒரு நிலையை எனக்களித்தது.
மரணம் ஒரு சிறந்த ஆசான். ஒரே ஒரு மரணத்தைக் கண்டான் ஸித்தார்த்தன் என்ற இளவரசன். கௌதம புத்தனாக மறுமலர்ச்சி தொடங்கியது அவனுள். வீட்டில் நிகழ்ந்த ஒரு மரணத்தைப் பற்றித் தீவ்ரமாக சிந்தித்தான் 14 வயது சிறுவனான வெங்கடராமன். தத்க்ஷணமே ரமண மஹர்ஷியாக மறு பிறவி எடுத்து விட்டான். கற்றிடும் ஆர்வம் நம்முள் இருக்கிறதா? ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு. எவராலும் கற்றுத் தர முடியாது. ஆனால், அனைவராலும் கற்க முடியும்'. கற்றுத் தரும் ஆற்றல் மரணத்திற்கு உண்டு என்பதில் துளியும் ஸந்தேஹம் இல்லை. மரணம் மட்டும் இல்லை, வாழ்வின் ஒவ்வொரு அனுபவமும் கற்றுத் தர வல்லவையே. ஆனால், நம்மில் பெரும்பாலோர் கற்றுக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை. நாம் ஸந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறோம் அல்லது துயரத்தில் மூழ்கி விடுகிறோம். இவ்விரண்டு நிலைகளும் கற்றுக் கொள்ள உகந்தவை அல்ல. அனுபவத்தில் இருந்து விலகி நின்று அவ்வனுபவத்தினை ஆராய்வதே கற்றுக் கொள்ள வழி வகுக்கும். என் தாத்தா 78வது வயதில் 50 வயது நிரம்பிய அவரது மகன் (முன்னே குறிப்பிட்ட ஜபல்பூர் சித்தப்பா) இறந்த செய்தி வந்த போது, எழுப்பிய அலறலின் ஒலி இன்றும் என் நினைவில் பதிந்துள்ளது. "எத்தனை மரணங்களைக் கண்டிருப்பார் இவர்? அதிலும் இந்த மரணம் எதிபாராதது அல்ல. பல வர்ஷங்களாகக் கடும் நோய்க் கண்டவர் இறந்திருக்கிறார்."
என்ஜினியரிங் கல்லூரியில் என்னுடன் படித்த ஸ்ரீ அனில் ரங்காரி சுடுகாட்டுச் சுவற்றை ஒட்டிய வீட்டில் வசித்து வந்தான். ஒரு முறை, மாணவர்கள் சிலர் அவன் வீட்டில் குழுமி இருந்தோம். "நீ தினமும் பிணத்தையும் அக்னியையும் புகையையும் பார்க்கிறாய் அல்லவா? உன் மனஸில்  எத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது?" என்று நான் அனிலிடம் கேட்டேன். மருத்துவம் பயிலும் மற்றொரு மாணவன், 'நானும்தான் தினம் தினம் பிணங்களைப்  பார்க்கிறேன். கையால் தொடுகிறேன். அவற்றைக் கூறு கூறாக அறுக்கிறேன். அதனால் என் விருப்பங்கள், மன உணர்வுகள், மற்றும் enjoyment மறைந்து விட்டதா என்ன?" என்றான். இத்தகைய எண்ணங்களை என் நண்பன் ஸ்ரீ விஷ்வாஸ் ஷிர்கோங்கரிடம் சர்ச்சை செய்த போது , 'ஒரு நல்ல மனோ தத்வ நிபுணரைப் பார் என்று ஆலோசனை வழங்கினான்.
"உலகத்தின் மிகப் பெரிய ஆச்சர்யம் எது?" என்று யக்ஷன் கேட்ட போது , "தன்னைச் சுற்றிலும் நித்யமும் மரணம் நிகழ்வதைக் கண்டும் தனக்கும் மரணம் உண்டு என்ற எண்ணம் மனிதனுக்கு வாராததே மிகப் பெரிய ஆச்சர்யம்" என்று பதிலளித்தானாம் யுதிஷ்டிரன். அகிலாவிற்கு ஏற்பட்ட 'அப்ளாஸ்டிக் அனீமியா' என்ற நோய் மரணத்தின் தர்ஷனம் பெற்றிடும் பெரும் வாய்ப்பினை எனக்கு அளித்தது.
இரண்டு மஹ ரிஷிகளின் வசனங்களைக் கூறி இந்த கட்டுரையை நான் முடித்துக் கொள்கிறேன். 2,500 வர்ஷங்கள் முன்னர் வாழ்ந்த ஆதி சங்கரர் ஒருவர். நூறு வர்ஷங்கள் முன்னர் வாழ்ந்து ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் என்ற அத்புத அமைப்பினை நிறுவிய டாக்டர் KB ஹெட்கேவார் மற்றவர்.

ந ம்ருத்யூர் ந ஷங்கா ந மே ஜாதி பேதஹ
பிதா நைவ மே நைவ மாதா ச ஜன்மஹ
ந பந்துர் ந மித்ரம் குரூர் நைவ ஷிஷ்யஹ
சிதானந்த ரூபஹ சிவோஹம் சிவோஹம் ...ஆதி சங்கர.
(எனக்கு ஜன்மமும் கிடையாது, மரணமும் கிடையாது. எனக்கு ஜாதியும் கிடையாது, எனக்கு தந்தையும் இல்லை தாயும் இல்லை. பந்துக்களும் இல்லை, மித்ரர்களும் இல்லை. நான் குவும் இல்லை சிஷ்யனும் இல்லை. ஒளியின், ஆனந்தத்தின் வடிவம் நான். சிவன் நான்.)
"இன்று நாட்டிற்காக, ஒரு நோக்கத்திற்காக உயிர் விடத் தேவை இல்லை. நாட்டிற்காக வாழ்வதே அதிக முக்கியம். ஒரு நோக்கத்திற்காக வாழ்வதே ப்ரதானம் ...டாக்டர் கேஷவ பலிராம்பந்த் ஹெட்கேவார்.

Comments

Popular posts from this blog

ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ ....

ॐ ஜ , ஷ , ஸ , ஹ , ஶ , க்ஷ , ஸ்ரீ என்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்கிறான் ஒருவன். ஸம்ஸ்க்ருத எழுத்து என்கிறான் ஒருவன் . மூடர்கள் .  அறியாமையில் பேசுகின்றனர் . தவறான நோக்கத்துடன், நம்முள் பேதத்தை ஏற்படுத்திட எவனோ புதைத்துச் சென்ற விஷத்தை , அது விஷம் என்று கூட அறியாமல் பேசுகின்றனர் . வட என்பது திஶை . திஶைக்கு மொழி கிடையாது . (இசைக்கும் மொழி கிடையாது . கவிதைக்குதான் மொழி . தமிழிசை மன்றம் என்பதெல்லாம் அபத்தம் .) தமிழகத்திற்கு வடக்கில் பாரத தேஶத்தின் அத்தனை ப்ராந்தங்களும் (கேரளம் தவிர்த்து) உள்ளன . தெலுங்கு , மராடீ , போஜ்புரி , குஜராதீ ... அனைத்து மொழிகளும் வட திஶையில் பேசப்படும் மொழிகள் .  இவை எல்லாம் வடமொழிகள் . (கன்யாகுமரி ஆளுக்கு சென்னை பாஷை கூட வடமொழிதான்) . இந்த எல்லா மொழிகளிலும் இந்த ஶப்தங்களுக்கு எழுத்துக்கள் உண்டு .   தெலுங்கில் జ  , స  , హ .. . என்றும் ,   கன்னடத்தில்   ಜ , ಸ , ಹ , ಕ್ಷ .. என்றும் , மராடீயில் . ज , स , ह , श , क्ष,.. என்றும் குஜராதியில்     જ , સ , હા , ક્ષ  , என்றும் ,   ப...

கீதையில் சில சொற்றொடர்கள் - 31

ॐ கீதையில் சில சொற்றொடர்கள் - 31 चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 13) Chatur VarNyam Mayaa Srushtam GuNa Karma Vibhaagashah ... (Chapter 4 - Shlokam 13) அர்தம் :   சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :   குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது. சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்... குண கர்ம விபாகஶ :  சதுர் வர்ணங்களை, நான்கு வர்ணங்களை நான்தான் ஸ்ருஷ்டித்தேன், என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன்.  இதில் என்ன ஆஶ்சர்யம் ??  ப்ரக்ருதியில் உள்ள அனைத்துமே அவர் படைத்தவை என்னும்போது, சதுர் வர்ணங்களையும் அவர்தானே படைத்திருக்க வேண்டும் ??  கீதையின் இந்த வாக்யம் நாஸ்திகவாதிகள், கம்யூனிஸ்ட்கள், கடவுள் மறுப்பு இயக்கத்தினர் என்று கடவுளை ஏற்காதவர்களையும் நெளிய வைக்கிறது.  கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்று கருதுகிறார்களா ??  இவர்கள் அனைவரும் ஜாதி அம...

August 28th... Flying visit to Chennai..

ॐ Out of the net for three days. Fying visits to Chennai on 28th and to Erode on the 30th. 29th was Shravana Poornimaa, day for License renewal . Went to Chennai for inauguration of ABVP Karyalayam. There was a day long meet of old workers of Vidyarthi Parishad. Recall of memories is always a refreshing experience. Probably, that is the reason why many want to live with 'glorious' old memories. Those days when our only asset was Enthusiasm at its best. Karyalaya, funds, facilities like vehicle, phone, etc. support, numerical strength, and other resources were on the lower side. Peanuts, Tea, Walk, long and short ones. Nevertheless, it was a great experience with high level of affectionate team working and sharing, hectic activism, great dreams. Nagpur Sangam Chawl Karyalayam was a tiled hut, but was always full of students. Similar in Chennai Ezhumbur Karyalaya. Now, there is no paucity of resources. We have best Karyalaya, powerful support, access to political power,...