Skip to main content

கீதையின் சில சொற்றொடர்கள் - 35

-: ॐ :-
கீதையின் சில சொற்றொடர்கள் - 35

कर्मण्यभिप्रवृत्तोsपि  ... (अध्याय ४  - श्लोक २०)
கரமண்யபி ப்ரவ்ருத்தோsபி ... (அத்யாயம்  4 - ஶ்லோகம்  20)
Karmanyabhi Pravrutto(a)pi ... (Chapter 4 - Shloka 20)

அர்தம் :  தன்னை மறந்து, செயலில் மூழ்கி  ஈடுபட்டும் ... 

இது ஒரு அழகான சொற்றொடர் .  அந்தச் சொற்றொடர் விவரித்திடும்  அந்நிலையும்  அழகான ஒரு நிலை.  இது ஒரு பூர்ணமாகாத  சொற்றொடர் என்று  தோன்றுகிறது.  தன்னை மறந்து, செயலில் மூழ்கி  ஈடுபட்டும் ...  ஆம்.  உண்மைதான்.  இது  பூர்ணமானது இல்லை.  ஆனால்,  இதை பூர்ணமாகிடும் பகுதியையும்  இச்சொற்றொடரே யூஹிக்க  வைக்கிறது.  "அவர் இந்தச் செயலிலும்  ஈடுபடவில்லை".  "அவர் செயலில் இருந்து  விலகியே நிற்கிறார்"...

ஈடுபாடு பூர்ணமானது.  மூழ்குதல் முழுமையானது.  ஶரீரம்,  மனஸ் மற்றும் புத்தி என்றனைத்தும்,  ஆளுமையின் அணு அணுவும்  ஈடுபட்டிடும்.  முழுமையாக ஈடுபட்டிடும்.  ஶரீரத்தில்  வேறு எந்தச் செயலுக்காகவும் ஆற்றல் மீதம் இருந்திடாது.  மனஸில்  வேறு எந்தச் செயலுக்காகவும்  ஆர்வமும் மிச்சம் இருந்திடாது.  புத்தியில்  வேறு எந்தச் செயலைப் பற்றிய சிந்தனையும் இருந்திடாது.  ஶரீரத்தில் எவ்வித  அஸைவும் ஆட்டமும் இருந்தாலும் அது ஈடுபட்டிருக்கும் செயலின் பூர்திக்காகவே இருந்திடும்.  மனஸில்  எவ்விதக் கனவு அல்லது ஆர்வம் மலர்ந்தாலும் அது ஈடுபட்டச் செயலைப் பற்றியதாகவே இருந்திடும்.  புத்தியில்  எவ்வித திட்டம் அல்லது யோஜனை  எழுந்தாலும் அது ஈடுபட்ட அச்செயல் மேன்மேலும் உன்னதமாகி விடுவதற்காகவே  எழுந்திடும்.  ஓய்வும் உறக்கமும் கூட அச்செயல் திறம்பட நடந்திட உதவிடும் வகையில் மாத்ரம் இருந்திடும்.

விலகி நிற்பதும் முழுமையானதாகவே  இருந்திடும்.  ஶரீரம்  களைத்திடும்.  எவ்வித ப்ரயத்னமும் இல்லாமல் உறக்கத்தில் ஆழ்ந்து விடும்.  படுத்த தத்க்ஷணம் உறங்கி விடும்.  ஶரீரம்  களைத்திருப்பது  உண்மைதான்.  ஆனால், களைத்திருக்கிறேன் என்பது இவனுள் பதிவாகாது.

மனஸ் அலுத்துக் கொள்ளாது.  மனஸ் உத்ஸாஹம் இழந்திடாது.  மனஸ் பரபரப்பும் அடையாது.  சோர்ந்து குலைந்தும் விடாது.  செயல் மற்றும் அதனால் விளையும் என்று எதிர்பார்க்கப்படும் பலன் மீது ஏற்படும் பற்று மனஸை மேற்கூறிய நிலைகளுக்குத் தள்ளும்.  இவரோ  செயலில் ஈடுபடுகிறார்.  செயலில் தொடர்ந்து மூழ்குகிறார்.  அவ்வளவுதான்.  செயலில் இருந்து தத்க்ஷணம் விலகியும் விடுகிறார்.  பிறர் கையில் ஒப்படைத்து விட்டு, அவர் எவ்வாறு செயகிறார் என்று காணும் ஆர்வமும் இல்லாமல், தன்னுடைய வழிகாட்டுதல் அல்லது யோஜனையை அவர் நாட வேண்டும் என்ற ஆஶையும் இல்லாமல் செயலில் இருந்து பூர்ணமாக விலகி விடுகிறார்.

நான் ஸந்தித்துப் பழகிய மனுஷ்யருள் என் தாயார்  இந்நிலையில் இருந்ததைப் பார்த்திருக்கிறேன்,  அநுபவித்திருக்கிறேன்.  அவள்  செயலில் ஈடுபட்டாள்.  ஒவ்வொரு க்ஷணமும் ஈடுபட்டாள்.  பூர்ணமாக ஈடுபட்டாள்.  பல்வேறு செயல்களில் ஈடுபட்டாள்.  கையில் இருக்கும் செயலில் மூழ்கி ஈடுபட்டாள்.  அவள் குற்றம், குறை கூறி புலம்பியதை நான் கேட்டதில்லை.  சோர்ந்து, முகம் வாடி அமர்ந்திருப்பதை நான் கண்டதில்லை.  ஒரு செயலின் மீது அவள் விஶேஷ ஆர்வம் கொண்டு  அதை நாடியதையும் நான் கண்டதில்லை.  அதே ஸமயம், வெறுப்பு கொண்டு ஒரு செயலை அவள் தவிர்த்திட முயல்வதையும்  நான் கண்டதில்லை.  செயலில் இணைந்திட எந்நேரமும் தயார்.  செயலில் மூழ்கித் தொடர்ந்திடத் தயார்.  செயலில் இருந்து ஒரே க்ஷணத்தில் விலகிடவும் தயார்.  இவ்வுலகத்தில் இருந்தும் அவள் எவ்வித பிரயாஸையும் இல்லாமல் விலகி விட்டாள்.

அவளிடம் இருந்து பெற்ற ப்ரஸாதம் ... இத்தகைய நிலையை முழு நேரம் ஸங்க (RSS) கார்யத்தில்  ஈடுபட்டிருந்த காலத்திலும்,  மனைவி அகிலா நோயால் பீடிக்கப்பட்டிருந்த காலத்திலும், ஸமீபத்தில் ஸ்ரீ ஶங்கர மடத்தின் நிர்வாஹத்தில் கவனம் செலுத்தும் கழிந்த மூன்று நான்கு மாஸ காலத்திலும் நான் அநுபவித்திருக்கிறேன்.  நானும் அநுபவித்திருக்கிறேன்.  ஸ்வய நினைவுடன் கூடிய சீரான, திட்டமிட்ட ப்ரயத்னங்களால் இந்நிலையை எய்திட முடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை.  ஆனால்,  ஒரு ஸில க்ஷணங்களேனும் இந்நிலையை அநுபவித்தவன் பாக்யஶாலீ, பரமனின் அநுக்ரஹம் பெற்றவன் என்பதில் லவலேஶமும்  ஸந்தேஹம் இல்லை.

Comments