Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 38


கீதையில் சில சொற்றொடர்கள் - 38

यज्ञ शिष्टामृतभुजो ...   (अध्याय ४ - श्लोक ३१)
யக்ஞ ஶிஷ்டாம்ருத புஜோ  ...  (அத்யாயம் 4 - ஶ்லோகம் 31)
Yagya Shishtaamruta Bhujo .... (Chapter 4 - Shloka 31)

அர்தம் :  யக்ஞத்தின் ஶேஷமான அம்ருதத்தை பூஜிப்பவன், உட்கொள்பவன் எவனோ ....

உலக வ்யவஹாரங்களில் கொடுத்தல் - வாங்கல்  பரிந்துரைக்கப் படுகிறது ...  கொடுத்தல்..- கொடுத்த பிறகு எடுத்துக் கொள்ளல். என்பதே கீதையின் இந்த ஶ்லோகத்தின் தாத்பர்யம்.  யக்ஞ ஶிஷ்டாம்ருத புஜோ ,  யக்ஞத்தின் ஶேஷத்தை, யக்ஞத்தின் மிச்சத்தை, எடுத்துக் கொள்.  அக்னீயில் ஆஹுதி  ஆக்குவதே யக்ஞம் என்றால், யக்ஞத்தின் ஶேஷம் வெறும் ஸாம்பல் மாத்ரமே ..  ஸாம்பலை புஜித்திடு என்பது கீதையின் யோஜனை ஆக முடியுமா ??  யக்ஞம் என்பது வெறும் அக்னீ கர்மம் இல்லை..  த்யாக பாவமே யக்ஞம். கொடுத்தல், ஸ்வய-நலமற்ற நோக்கத்திற்கு, உயர்ந்த நோக்கத்திற்கு கொடுத்தாலே யக்ஞம்.

நாம் அனைவரும், இங்குள்ள உயிர்கள் அனைத்தும் தாம் உயிர் வாழ்வதற்கே  எடுத்தாக வேண்டும்.  யக்ஞ ஶேஷத்தை எடுத்துக் கொள் என்ற பதத்திற்கு இரண்டு விளக்கங்கள் இருக்க முடியும்.. ஒன்று...கொடுத்தல், கொடுத்து விட்டு எடுத்துக் கொள்ளல்.. பிறருக்குக் கொடுத்தல்.. பின்னர் ஸ்வயத்திற்கு எடுத்துக் கொள்ளல். இரண்டு .. கொடுத்தல் இயலலாம், இயலாமல் போகலாம் ...  ஆனால், ஸ்வயத்திற்காக குறைந்த பக்ஷம் எடுத்துக் கொள்ளல் ..  உயிர் வாழ்ந்திட குறைந்த பக்ஷம் அவஶ்யம் எதுவோ, அதை மாத்ரம் எடுத்துக் கொள்ளுதல்..  போக பாவத்துடன் அல்லாமல் த்யாக பாவத்துடன் எடுத்துக் கொள்ளல் ...இவ்விரண்டு நிலைகளுக்கும் உருவகம் கொடுத்தால் அங்கு நம் தாய் தோன்றுவாள்...  அவள் கொடுக்கிறாள்.. கொடுக்க மட்டும் செய்கிறாள் ...  அவள் கார்யங்களைச் செய்வதும், போஜனம் ஸமைப்பதும், பாடல் பாடுவதும், பிரார்தனை செய்வதும், திட்டம் போடுவதும், சிந்தனைச் செய்வதும்..  அவள் எதைச் செய்தாலும் அவை அனைத்தும் பிறருக்காகவே ..  தன் குழந்தைகளுக்காக மாத்ரம் அல்லாமல், 'என்னுடையவர்' 'என் குடும்பத்தவர்' என்று அவள் எவரை எல்லாம் ஏற்றுக் கொண்டிருக்கிறாளோ அவர்கள் அனைவருக்காகவும் ...செய்கிறாள்.. அவளது ஆற்றல், அவளது உழைப்பு, அவளது புத்தி, அவளது திறமைகள், அவளது நேரம் .. அவளிடம் வேறு என்னென்ன இருக்கிறதோ அவை அனைத்தும் .. 'என்னவர்கள்' என்று அவள் கருதிடும் பிறருக்காக ... அதே ஸமயம், அவளது வேதனை, அவளது வலி, அவளது து:க்கம், அவளது கவலைகள்..  இவற்றில் எதுவும் பிறருக்கு இல்லை .. இவற்றை அவள் தன்னுள், ஆழத்தில் மறைத்து வைத்துக் கொள்கிறாள் .. 

இங்கு ஒரு கேள்வி எழுகிறது ..  இது நான்-எனது என்ற மமதை அல்லவா ?  ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் ...  அன்பினால், தூய, ஸ்வய-நலமற்ற அன்பினால் மாத்ரமே கொடுக்க வைக்க முடியும் ..  என்னுடைய என்ற மமதையால் உரிமைக் கொண்டாட வைக்க முடியுமே அன்றி,  எதிர்ப்பார்க்க வைக்க முடியுமே அன்றி கொடுக்க வைக்க முடியாது ...
ப்ரக்ருதி அல்லது இயற்கையும் இவ்வகையிலேயே அமைந்துள்ளது ... கொடுத்தல் அதிக-பக்ஷம்... எடுத்துக் கொள்ளுதல் குறைந்த-பக்ஷம்..

இதை ஸ்வய-நலம் என்றும் கூறலாம்...  ஆனால், இங்கு ஸ்வயம் என்பது குறுகிய, நான் மாத்ரம் இல்லை.  விரிந்த நான்.. விஸ்தாரமான நான் ... பிறரை தன்னுள் ஐக்யமாக்கிக் கொண்ட நான்... அன்பு செலுத்துதல், கொடுத்தல் என்னும் போது, அதில்  த்வைத பாவம்   உள்ளது.இரண்டு உள்ளன.  அன்பு செலுத்துபவர், அன்பு செலுத்தப் படுபவர்... கொடுப்பவர், வாங்குபவர் ... அதை விட உன்னதமானது அத்வைத பாவம் உள்ள நிலை... இங்கு கொடுப்பவரும் வாங்குபவரும் வெவ்வேறு இல்லை.. இங்கு அன்பு செலுத்துதல் இல்லை, கொடுத்தாலும் இல்லை...  ஸ்வய-நலம் மாத்ரமே ...  ஆனந்த மயமான ஸ்வய-நலம்...  ப்ரஹ்ம-மயமான ஸ்வய-நலம்...

Comments