Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 57


கீதையில் சில சொற்றொடர்கள் - 57

सम बुद्धिर्विशिष्यते  ...  (अध्याय ६ - श्लोक ९ )
ஸம புத்திர் விஶிஷ்யதே  ...  (அத்யாயம் 6 - ஶ்லோகம் 9)
Sama Buddhir Vishishyate  ...  (Chapter 6 - Shloka 9)

அர்தம் :  ஸமத்வம் கொண்ட புத்தி விஶேஷமானது  ...

ஸமத்வம் , ஸமத்வம் ... ஸ்ரீ க்ருஷ்ணன் கீதையில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் கருத்துக்களில் இது ப்ரதானமானது .

மநுஶ்யனின் புத்தி மூன்று ப்ரதான விஷயங்களால் ஸமத்வத்தை இழக்கிறது .  வஸ்துக்கள் , அநுபவங்கள் மற்றும்  மநுஶ்யர்கள் .

உலக வாழ்க்கை என்றாலே அநுபவங்களின் ஶேகரிப்பு தான் . குழந்தைப் பர்வம் முதல் இறுதி மூச்சு வெளியேறும் வரை அநுபவங்கள் பெறுகிறோம் .  அநுபவங்கள் தவிர்க்க முடியாதவை .  அநுபவங்களைப் பெற்று அவற்றில் இருந்து கற்றுக் கொண்டு நாம் வளர்ந்தால் சிறப்பு .  ஆனால் அவ்வாறு நடப்பதில்லை .  நம் மனஸ் அநுபவங்களை ஸ்தரம் பிரிக்கிறது .  அநுகூலமானவை , ப்ரதிகூலமானவை , இனிப்பானவை , கசப்பானவை , ஹிதமானவை , கொடூரமானவை , என்று பட்டியல் இடுகிறது .  சிலவற்றை நாடுகிறது .  மற்றவற்றைத் தவிர்க்க விழைகிறது .  இவை ரெண்டும் நிஶ்சயம் தோல்வி தரப் போகும் முயற்சிகள் என்பதால் மனஸின் ஸமத்வம் அழிகிறது .

அதே போல , பொருட்களையும் மதிப்பில்  உயர்ந்தது , தாழ்ந்தது , என்று பாகுபடுத்தி , உயர்ந்தவற்றைப்  பெற்றிட வேண்டும் என்ற தீவிர காமம் மனஸில் உதித்து விடுவதால் , மனஸின் ஸமத்வம் அழிந்து போகிறது .

உயர்ந்தது என்று கருதுவதை அடைந்திட வேண்டும் என்ற பேரவாவினால் உந்தப்பட்டு தம் ஶக்தியை மீறி அலைவதால் நிம்மதி இழந்த மனஸ் ஸமத்வம் இழக்கிறது .

உயர்ந்தது என்று கருதப்படுவது அழிந்தோ தொலைந்தோ விடுவதால் மனஸின் ஸமத்வம் அழிந்து விடுகிறது .

அந்யரிடம் உள்ளதைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவதால் , பொறாமைக் கொள்வதால் மனஸின் ஸமத்வம் அழிகிறது .

தன்னை மற்றவர்களுடன் ஒப்பிடுவதால் மனஸின் ஸமத்வம் அழிகிறது .

மதிப்பெண் கொடுத்து அந்யரை மதிப்பிட்டு, ஒப்பிட்டு ஏற்றத்தாழ்வுகள் பார்ப்பதால் மனஸின் ஸமத்வம் அழிகிறது .

தனக்குக் கிடைக்கத் தகுதி உண்டு என்று கருதி , அதைக் கொடுக்காதவர் , தாராளமாகக் கொடுப்பவர் , குறைவாகக் கொடுப்பவர் என்று அந்யரைப் பாகுபடுத்தி , அதன் விளைவாக மனஸின் ஸமத்வத்தை இழந்து போகிறது .

ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்வது , "அநுபவங்களை உள்ளபடி ஏற்றுக் கொள்ள வேண்டுமே அன்றி வகைப் பிரிக்கக் கூடாது .

பொருட்களை மண் , பொன் , விலை உயர்ந்தவை , அல்பமானவை என்றெல்லாம் பாகுபடுத்தாது மனஸின் ஸமத்வத்தைப் போற்றிக் காக்க வேண்டும் .

மநுஷ்யர்களை ஸாது , துஷ்டன் , நண்பன் , எதிரி , நலன் விரும்புபவன் , நடு நிலை வஹிப்பவன் , கண்டு கொள்ளாதவன் , வெறுப்பவன் என்றெல்லாம் பாகுபடுத்தாது மனஸின் ஸமத்வத்தைப் போற்ற வேண்டும்" .

ஸம புத்தி விஶேஷமானது .

Comments