Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 101


கீதையில் சில சொற்றொடர்கள் - 101


योगक्षेमं वहाम्यहम्  ।  (अध्याय ९ - श्लोक २२)
யோகக்ஷேமம் வஹாம்யஹம்  ...  (அத்யாயம் 9 - ஶ்லோகம் 22)
YogaKshemam Vahaamyaham  ...  (Chapter 9 - Shloka 22)

அர்தம் :  யோகத்தையும் க்ஷேமத்தையும் நான் கவனித்துக் கொள்கிறேன் .

யோகம் என்றால் அவஶ்யமானதை அருளுவது .  க்ஷேமம் என்றால் இருப்பதைக் காப்பது .  உலக வாழ்க்கையில் இவை ரெண்டு கார்யங்களே (Procurement and Maintenance) நாம் பெரும்பாலும் செய்வது .  பொருட்களை வாங்குகிறோம் .  அவற்றைக் காக்கிறோம் .  சீப்பு , பேனா போன்ற அல்ப விஷயங்களில் இருந்து வண்டி , வீடு என்று பெரிய விஷயங்கள் வரை ... வாங்குகிறோம் .  ஸரியாகப் பயன்பட வேண்டும் எனில் பாதுகாக்கிறோம் .  இவ்விரண்டு கார்யங்களையும் 'நான் பார்த்துக் கொள்கிறேன்' , என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் .

அனைவருக்குமா ?  'வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் என் சிந்தனையில்' லயித்திருப்பவனின் யோகம் மற்றும் க்ஷேமத்தை நான் கவனித்துக் கொள்கிறேன் .

பொதுவாக , தன்னைப் பற்றி சிந்திக்காமல் , அந்யரின் சிந்தனையில் மூழ்கி இருப்போரின் ஸ்வந்த அவஶ்யங்கள் அனைத்தும் , அவரது நாட்டமும் முயற்சியும் இல்லாமல் கவனிக்கப் படுகின்றன .  இது ஸத்யம் .  ஸாதுக்கள் மற்றும் நம் வீடுகளில் தாய்மார்கள் இவ்விஷயத்தில் மிகச் சிறந்த உதாஹரணங்கள் .

ஸாது உணவு , வஸ்த்ரம் , ராத்ரீ ஓய்விடம் போன்ற ஸ்வந்த அவஶ்யங்கள் பற்றிக் கவலைப் படுவதில்லை .  அவர் எந்த முயற்சியும் எடுப்பதில்லை .  அவருடைய தேவைகள் அனைத்தும் பூர்தி ஆகின்றன .  இவை பூர்தி ஆவதற்கு எவ்வித ஏற்பாடும் செய்து வைக்கப் படுவதில்லை .  எனினும் பூர்தி ஆகின்றன .

நம் வீட்டில் அம்மா , கார்யத்தில் திளைத்திருந்தால் அக்கார்யம் வீட்டைப் பற்றி இருந்திடும் .  வீட்டில் உள்ளோரைப் பற்றி இருந்திடும் .  அவள் சிந்தனையில் மூழ்கி இருந்தாலும் , சிந்தனை வீட்டைப் பற்றியே இருந்திடும் .  வீட்டில் உள்ளோரைப் பற்றியே இருந்திடும் .  அவள் கார்யம் மற்றும் சிந்தனையில் , 'தான் - தன்னுடைய தேவைகள் - தன்னுடைய கவலைகள்' இருந்திடாது .  அவளுடைய அவஶ்யங்கள் , அவள் நாடாமல் , நினைவு படுத்திடாமல் , formal ஏற்பாடு ஏதும் இல்லாமலே பூர்தி ஆகின்றன .

என் அல்ப வாழ்க்கையில் எனக்கு ஸ்ரீ க்ருஷ்ணனுடைய இந்த வசனத்தை த்ருடப் படுத்தும் அநுபவங்கள் பலமுறை கிடைத்திருக்கின்றன .நான் பணம் ஸம்பாதித்ததில்லை .  பணம் ஸம்பாதிப்பதற்கான எந்த முயற்சியும் செய்வதில்லை என்பதில் ஸ்திரமாக இருந்தேன் .  ஸ்வந்த அவஶ்யங்களுக்காக உழைப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன் .  ஆனால் , ஸ்ரீ க்ருஷ்ணன் எனக்கு உலகாயத அவஶ்யங்கள் எதிலும் குறை வைக்கவில்லை .  எல்லாம் கொடுத்தான் .  என்னுடைய தகுதியை மீறிக் கொடுத்தான் .

இதில் மற்றொரு நிர்பந்தம் இணைந்திருக்கிறது .  எனக்கு யோகம் எது , க்ஷேமம் எது என்பதை அவன் நிர்ணயிப்பான் .  நான் அடைய வேண்டியது எது , என்னிடம் உள்ளவையில் காப்பாற்றப் பட வேண்டியவை எவை என்பதில் எனக்கு லவ லேஶமும் சாய்ஸ் இருக்கக் கூடாது .  அவை பற்றிய சிந்தனையே என் மனஸில் உதிக்கக் கூடாது .  அவனுக்குத் தெரியும் .  அவன் பார்த்துக் கொள்வான் .  எனக்கு இது வேண்டும் , என்னிடம் உள்ள இது காக்கப் பட வேண்டும் என்று நான் நிர்ணயித்து விட்டு , இதில் உதவிக்கு வர வேண்டும் என்று அவனை அழைத்தால் ... வருவானா ?  வர மாட்டான் .  நிஶ்சயம் வர மாட்டான் .

ஸிந்த் ப்ரதேஶத்தில் மிஹிர் பாபா என்று ஒரு ஸாது இருந்தார் .  ஆன்மீக ப்ரவசனங்கள் செய்து வந்தார் .  அவருடைய மூன்று புதல்வர்களும் ஒரே ஸமயத்தில் அம்மை கண்டு இறந்து விட்டனர் .  ஆன்மீக விஷயங்கள் பேசினாலும் , அவரால் இதை ஏற்க முடியவில்லை .  அழுதார் .  புரண்டார் .  தலையை முட்டி முட்டி புலம்பினார் .  அவருடைய மனைவி , "அவன் கொடுத்தான் .  அவன் கொடுத்ததை , அவனுடையதை , அவன் எடுத்துக் கொண்டான்" , என்றாள் .  அவள் ஆன்மீகம் படித்ததில்லை .  ஆன்மீகம் பேசியதில்லை .  ஆனால் , அவளது இவ்வார்த்தைகள் ஆழமான ஆன்மீக பாவனையை வெளிப்படுத்தின .  மிஹிர் பாபா  தத்க்ஷணம் ஸாதுவாக மாறி விட்டார் .  ப்ரஸங்கத்தில் பேசும் வார்தைகளுக்கு ஏற்ப அவரது பாவனை மாறி விட்டது .

ஸ்ரீ ராமன் கடற்கரையில் அமர்ந்து , அம்புகளை மணலில் புதைத்துக் கொண்டிருந்தார் .  மீண்டும் எடுத்த போது , ஒரு அம்பு முனையில் ஒரு தவளை சிக்கி இருந்தது .  குதறப் பட்டு , ரக்தக் கிளறியாக இருந்தது .  பதறிப் போனார் ஸ்ரீ ராமன் .  "உன் மேல் அம்பு முனைப் பட்டவுடன் ஶப்தம் எழுப்பி இருக்க வேண்டாமா ?" என்றார் .  "ஸ்ரீ ராமா !  நான் பிறந்ததில் இருந்து உன் பெயரைச் சொல்லி வருகிறேன் .  எனக்கு அவஶ்யமான உணவைக் கொடுத்து இருக்கிறாய் .  அதை ஏற்று இருக்கிறேன் .  என் புஷ்டியான தேஹத்தைப் பார் .  இன்று அதே நீ ஒரு அம்பு முனையைக் கொடுக்கும் போது , வேண்டாம் என்று மறுப்பது ஸரியாகுமா ?  புஷ்டியான உணவைக் கொடுத்தது நீ .  அம்பு முனையைக் கொடுத்ததும் நீ .  உணவை உன் ப்ரஸாதமாக ஏற்ற எனக்கு , நீ கொடுக்கும் அம்பு முனையும் ப்ரஸாதமே" , என்றது அந்தத் தவளை .

நமக்கு யோகம் எது , க்ஷேமம் எது என்பதை அவன் நிர்ணயிப்பான் .  "யோக க்ஷேமம் வஹாம்யஹம்" என்கிறான் ஸ்ரீ க்ருஷ்ணன் .

Comments