Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 113


கீதையில் சில சொற்றொடர்கள் - 113


भूयः कथय तृप्तिर्हि शृण्वतो नास्ति मेSमृतम्   ... (अध्याय १० - श्लोकम १८)
பூயஹ கதய த்ருப்திர்ஹி ஶ்ருண்வதோ நாஸ்தி மே(அ)ம்ருதம்  ... (அத்யாயம் 10 - ஶ்லோகம் 18)
Bhooyah Kathaya Truptirhi Shrunvato Naasti Me(a)mrutam  ... (Chapter 10 - Shlokam 18)

அர்தம் :  அம்ருதத்திற்கு ஒப்பான உங்கள் வார்தைகளைக் கேட்டு எனக்கு த்ருப்தி ஏற்படுவதில்லை ...

பேசுபவர் மற்றும் கேட்பவர் மத்தியில் நிலவிடும் ஸம்பந்தமே பேசுபவரின் வார்தைகளை மதுரமானதாக்கும் .  அம்ருதத்திற்கு ஒப்பானதாக்கும் .  கேட்பவர் மனஸில் பேசுபவர் பற்றி எல்லையற்ற ப்ரீதி இருக்க வேண்டும் .  இங்கு அர்ஜுனன் மனஸில் ஸ்ரீ க்ருஷ்ணனைப் பற்றிய பாவனை தூய அன்பும் ஸ்நேஹமும் கலந்தது .  ஸ்ரீ க்ருஷ்ணனும் அர்ஜுனன் மேல் அபார ஸ்நேஹமும் , ப்ரியமும் வைத்தவன் .  கீதையில் பல முறை 'இஷ்டோ(அ)ஸி , ப்ரியோ(அ)ஸி என்றெல்லாம் கூறி அதை வெளிப்படுத்தவும் செய்கிறான் .

பேசக்கூடிய மொழியும் பேசப்படும் வார்தைகளும் ப்ரதானம் இல்லை .  தாய் தந்தையருக்கு குழந்தையின் மழலை தேன் போல தித்திக்கும் .  அம்ருதம் போல இருந்திடும் .  ப்ரேமையில் மூழ்கி இருக்கும் கணவன் மனைவிக்கு ஒருவருக்கு மற்றவருடைய வார்தைகள் பரஸ்பரம் தித்திப்பானதாக , கேட்கக் கேட்கத் தெவிட்டாததாக இருந்திடும் .  குருவிற்கு ஶிஷ்யனுடைய கள்ளம் கபடம் அற்ற க்ஞானப் பிதற்றல்களும் ஶிஷ்யனுக்கு குருவினுடைய ஆழமான க்ஞான விளக்கங்களும் எவ்வளவு கேட்டாலும் , எத்தனை தடவை கேட்டாலும் த்ருப்தி அளிக்காத மதுர வ்ருஷ்டியாக , தேன் மழையாக இருந்திடும் .  தேஶ பக்தனுக்கு தேஶத்தின் பெருமைகள் அம்ருதத்திற்கு ஒப்பானதாக , எத்தனை முறை கேட்டாலும் அலுக்காததாக இருந்திடும் .  பக்தனுக்கு பரமனின் லீலைகளும் விபூதிகளும் என்றும் த்ருப்தி அளிக்காதவையாக , அம்ருதகானமாக இருந்திடும் .

பேசுபவரின் மன நிலையும் மஹத்வம் வாய்ந்தது .  எதற்காகப் பேசுகிறார் என்பதைப் பொருத்து , அவரது பேச்சு கேட்பவரின் மனஸில் தாக்கத்தை ஏற்படுத்திடும் .  அத்தகைய தாக்கத்தை வைத்தே பேசுபவரின் மன நிலையை அறிந்து கொள்ள முடியும் .  கேட்பவர் மனஸில் பேசுபவரைப் பற்றிய சிந்தனை எழுந்தால் , (ஆஹா !  இவர் எவ்வளவு அழகாகப் பேசுகிறார் , எவ்வளவு படித்திருக்கிறார் ...) பேசுபவர் , தற்பெருமைக்காக , பாராட்டு மற்றும் கைத் தட்டலுக்காக , ஸ்வய அஹங்காரத்தை வெளிப்படுத்தப் பேசுகிறார் என்று அர்தம் .  கேட்பவர் மனஸில் பேச்சின் கருத்தைப் பற்றிய சிந்தனை எழுந்தால் , பேசுபவர் கருத்திற்காகப் பேசுகிறார் என்று அர்தம் .  கேட்பவர் தன்னை மறந்து , ஸுற்று சூழலை மறந்து ஆனந்தத்தில் மூழ்கினால் , பேசுபவரும் தன்னை மறந்த நிலையில் , பர வஶ நிலையில் , பரம ஆனந்தத்தில் மூழ்கி பேசுகிறார் ...  இல்லை ..  இல்லை ..  அவர் பேசவில்லை , பேச்சு அவர் உள்ளிருந்து வெளிப்படுகிறது என்று அர்தம் .  இத்தகைய பேச்சே அம்ருதம் போல இருந்திடும் .  எவ்வளவு கேட்டாலும் இன்னம் கொஞ்ஜம் கேட்கலாம் என்று தோன்றிடும் .  எவ்வளவு கேட்டாலும் த்ருப்தி அளித்திடாது .

இங்கு வக்தாவான ஸ்ரீ க்ருஷ்ணனின் மனநிலையும் ஶ்ரோதாவான அர்ஜுனனின் மனநிலையும் இவ்வாறு இருப்பதால் அர்ஜுனன் , "ஹே கிருஷ்ண !  அம்ருதத்திற்கு ஒப்பான உனது வார்தைகள் எனக்கு த்ருப்தி அளிக்கவில்லை " என்கிறான் .   

Comments