Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 115


கீதையில் சில சொற்றொடர்கள் - 115


इन्द्रियाणां मनश्चास्मि  ... (अध्याय १० - श्लोक २२)
இந்த்ரியாணாம் மனஶ்சாஸ்மி  ...  (அத்யாயம் 10 - ஶ்லோகம் 22)
Indriyaanaam Manaschaasmi  ... (Chapter 10 - Shlokam 22)

அர்தம் :  இந்த்ரியங்களில் நான் மனஸ்  ...

நமக்கு ஐந்து ஞானேந்த்ரியங்கள் .  தர்ஶனம் (பார்க்கும் ஆற்றல்) , ஶ்ரவணம் (கேட்கும் ஆற்றல்) , ஸ்பர்ஶனம் (தொட்டு உணரும் ஆற்றல்) , ஜிக்னன் (நுகரும் ஆற்றல்) மற்றும் அஶ்னன் (ருசித்து உணரும் ஆற்றல்) .  இந்த ஆற்றல்களுக்கான கருவிகள் முறையே கண் , காது , தோல் , நாஸி மற்றும் நாக்கு .

இந்தக் கருவிகள் அத்புதமானவை .  அவை செய்யும் கார்யங்களும் மஹத்தானவை .  நுட்பமானவை .  நமக்கு ஆனந்தம் அளிப்பவை .  உலகத்தின் நிறங்களையும் , ரூப லாவண்யங்களை நமக்குப் பரிமாறுவது கண் .  கண் மிகச் சிறந்த கருவி என்று தோன்றிடும் .  ஆனால் , கொஞ்ஜம் ஆராய்ந்தால் கண் ஒரு த்வாரம் மாத்ரமே என்பது விளங்கிடும் .  பழைய காலத்தில் இருந்த கேமராவின் ஷட்டர் போல .  வெளிக் காக்ஷிகளை உள்ளே நுழைய விடுவதுடன் அதன் வேலை முடிந்தது .  உள்ளே வந்திருக்கும் காக்ஷிகளை அலசி , ஆராய்ந்து நிர்ணயத்திற்கு வருவதெல்லாம் பின்னால் இருக்கும் மூளை மற்றும் நரம்புகளின் வேலை .  இவை எல்லாம் தத்தம் கார்யங்களைச் செய்து முடித்த பின் , அந்தக் காக்ஷியின் ஆனந்தத்தில் லயிப்பது மனஸ் .  அதில் ப்ரமித்து மயங்குவது மனஸ் .  இதே போலத்தான் மற்ற இந்த்ரியங்களும் அவற்றின் கருவிகளும் .  இவற்றுக்குப் பின்னால் ராஜாவைப் போல அமர்ந்திருப்பது மனஸ் .

மனஸ் இருக்கிறதா ?  இருக்கிறது ஆனால் இல்லை .  இல்லாமல் இருக்கிறது .  எங்கு இருக்கிறது ?  எங்கும் இருக்கிறது ..  எங்கும் இல்லை .  மனஸ் தான் இந்த இந்த்ரியங்களை இயங்குகிறதா ?  இல்லை .  ஆனால் , மனஸ் இல்லை என்றால் இந்த்ரியங்கள் செயலற்றுப் போய் விடுகின்றன .  மனஸ் கண்களுக்குப் பின்னால் இல்லை என்றால் , காக்ஷிகள் உள்ளே பதிய மறுக்கின்றன .  இவை அனைத்தும் பரமனின் லக்ஷணங்கள் .

இந்த்ரியங்களில் மனஸ் நான் ...  என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் .

Comments