Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 174


கீதையில் சில சொற்றொடர்கள் - 174


असक्तिः अनभिष्वङ्गः पुत्र दार गृहादिषु ।।  (अध्याय १३ - श्लोक ९)
அஸக்திஹ் அனபிஷ்வங்கஹ் புத்ர தார க்ருஹாதிஷு ..  (அத்யாயம் 13 - ஶ்லோகம் 9)
Asaktih Anabhshvangah Putra Daara Gruhaadhishu ..  (Chapter 13 - Shloka 9)

அர்தம் :  புதல்வன் , தாரம் , வீடு போன்றவை மீது பற்றில்லாமல் இருத்தல் ..

மநுஷ்யனுக்கு மிக ஸமீபத்தில் , அவன் மிகவும் அதிகமாக எனது என்ற மமதை கொண்டாடும் மூன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறார் ஸ்ரீ க்ருஷ்ணன் ..  புதல்வர்கள் , தாரம் மற்றும் வீடு ..  "இவன் என்னில் இருந்து தோன்றியவன் ..  எனது படைப்பு" என்ற பாவனை காரணமாக புதல்வனிடமும் ..   விவாஹம் என்ற பந்தம் காரணமாகவும் ஶரீர ரீதியாகவும் மன ரீதியாகவும் உறவு கொள்வதாலும் ஏற்பட்ட பாவனை 'இவள் என்னுடையவள்' என்ற பாவனை காரணமாக மனைவியிடமும் ..  ''என் பணத்தால் , என் யோஜனையில் இதைக் கட்டி இருக்கிறேன் ..  நானும் என்னுடையவர்களும் வஸிப்பதற்காகக் கட்டி இருக்கிறேன் என்ற எண்ணம் காரணமாக வீட்டின் மேலும் பற்றுதல் ஏற்படுகிறது ..

என்னுடையது என்ற இந்த மமதை ஸரியா ??  இவர்கள் , இவை என்னுடையவையா ?  மனைவி ஒருவருக்கு மகள் ..  வேறு ஒருவருக்கு ஸஹோதரி ..  வேறு ஒருவருக்கு அன்னை ..  எனக்கு மனைவி ..  என்னுடையவள் ஆகிறாளா ?  இது உலகப் பார்வையில் ..  ஆன்மீக த்ருஷ்டியில் ஒவ்வொரு ஜீவனும் ஆத்மாவே ..  பகவானின் அம்ஶம் ..  பகவானுடையது ..  ஜீவன் ஶரீரத்தை ஏற்று உலகத்திற்கு வருகிறது ..  உலக வாழ்க்கையில் பலப்பல உறவுகள் அமைத்துக் கொள்கிறது ..  இவ்வுறவுகள் ஸம்ஸார வாழ்க்கைக்காக மாத்ரமே ..  ஸ்ரீ பகவான் நான்காம் அத்யாயத்தில் கூறுகிறார் ..  "அர்ஜுனா !  நான் பலமுறை உலகத்தில் ஜன்மம் எடுத்துள்ளேன் ..  நீயும் எடுத்துள்ளாய் .."  ஸ்ரீமத் பாகவதத்தில்கபில - தேவஹூதி ஸம்வாதத்தில் ஸ்ரீ கபிலர் கூறுகிறார் .. "நான் உலகத்தில் பல முறை பல்வேறு தாய் தந்தையர் மூலம் வந்திருக்கிறேன் ..  இந்த ஜன்மத்தில் உங்கள் மூலம் வந்திருக்கிறேன் .."  அதே போல மனைவியும் ..  அவளும் பல ஜன்மங்கள் எடுத்திருப்பாள் ..  பலருக்கு மனைவியாக இருந்திருப்பாள் அல்லவா ?  நம் தேஶத்தில் காரடையான் நோன்பு , மங்களா கௌரி போன்ற வ்ரதங்கள் உண்டு ..  மனைவிமார் இவ்வ்ரதம் அநுஷ்டித்து , "எனக்கு இதே புருஷன் ஏழேழு ஜன்மங்களுக்கும் புருஷனாக வாய்க்க வேண்டும் என்று ப்ரார்தனை செய்வார்கள் ..  ஜீவாத்மா தனது வாஸனைக்கு ஏற்ப ஒரு ஶரீரத்தைத் தேடிப் பெற்றிடும் ..  உலக வாழ்க்கையில் பல்வேறு உறவுகளை ஏற்படுத்திடும் ..  ஆத்மா அந்த உறவுகளுக்கும் , அந்த ஶரீரத்திற்கும் , இந்த உலக வாழ்க்கைக்கும் அப்பாற்பட்டது ..

புதல்வர்கள் என்னுடையவர்களா ?  ஃபார்ஸீ க்ஞானி (இன்றைய இரான் இஸ்லாம் மதத்திற்கு மாறும் முன்னர் பர்ஷியாவாக இருந்தது ..)  ஸ்ரீ கலீல் ஜிப்ரான் பெற்றோருக்கும் புதல்வருக்கும் இடையே உள்ள ஸம்பந்தம் வில்லுக்கும் அம்புக்கும் இடையே உள்ளது போலாகும் என்கிறார் ..  அம்புக்கு ஸ்வந்த லக்ஷ்யம் உண்டு ..  அதை அடைவதற்கு ப்ரயாணிக்க வேண்டிய பாதையும் உண்டு ..  வில் அம்பை 'எனது' என்று கருதி தன்னுடன் பிணைத்து வைத்துக் கொள்ள முடியாது ..  அம்பு தனது மார்கத்தில் ப்ரயாணித்து , தனது லக்ஷ்யத்தை அடைவதற்கு ஏற்றவாறு , வில் தன்னை தயாரித்துக் கொள்ள வேண்டும் ..  அம்பையும் தயார் செய்ய வேண்டும் ..  ஸத்யம் என்னவென்றால் வில் , அம்பு ரெண்டும் வேறு ஒருவர் கையில்  உள்ளன ..அவருடைய விருப்பப் படி , அவருடைய யோஜனைப் படி செலுத்தப் படும் ..

வீடு என்னுடையதா ?  நேற்று ஒருவருடையதாக இருந்தது ..  இன்று என்னிடம் இருக்கிறது ..  நாளை வேறு ஒருவருடையதாக இருந்திடும் ..  எனது , எனது என்று கூறிய படி மமதை கொண்டாடுபவரைப் பார்த்து வீடு , "பார் , பார் !  மற்றும் ஒரு பைத்யம் கிளம்பி விட்டது ..  ஐம்பது வர்ஷங்கள் முன்னர் இப்படித்தான் ஒரு பைத்யம் எனது எனது என்று ஜபித்தவாறு திரிந்தது ..  இன்று மண்ணில் புதைந்து கிடக்கிறது .."

அன்பு , பற்று ரெண்டிலும் வேறுபாடு உள்ளது ..  அன்பில் பிறரின் ஹிதம் மற்றும் நலன் விழைதல் மாத்ரமே ..  பற்றில் தனக்கு என்று அவரிடம் எதிர்ப்பார்ப்பு மாத்ரமே ..  அன்பில் பிணைப்பு இல்லை ..  பற்றில் உண்டு ..  அன்பில் 'நீ' மாத்ரமே ..  பற்றில் 'நான்' மாத்ரமே ..  "நான் சொன்னபடி செய்ய வேண்டும் .." ;  "நான் இல்லை என்றால் தான் உங்களுக்குப் புரியும் .."  இத்தகைய வசனங்கள் பற்றின் விளைபவை ..  அன்பில் அல்ல ..  மனைவி குழந்தைகள் மீது அன்பு வேண்டும் ..  பற்று கூடாது ..  வீட்டின் மீது கவனம் வேண்டும் ..  கடமை உணர்வோடு வீட்டில் உள்ள குறைகள் நீக்கப் பட வேண்டும் ..  ஆனால் , வீட்டின் மேல் பற்றுதல் கூடாது ..

Comments