Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 176


கீதையில் சில சொற்றொடர்கள் - 176


अरतिः जन संसदि ।।  (अध्याय १३ - श्लोक १०)
அரதிஹ் ஜன ஸம்ஸதி ...  (அத்யாயம் 13 - ஶ்லோகம் 10)
Aratih Jana Samsadi ..  (Chapter 13 - Shloka 10)

அர்தம் :  ஜனக் கூட்டங்களில் ஆர்வம் இன்மை ..

வாஸலில் , தெருவில் ஒரு அரவம் கேட்டால் உடனே ஓடி வந்து என்னவென்று பார்ப்பது , ஒரு பிண ஊர்வலமோ , மாப்பிள்ளை ஊர்வலமோ வேறு ஏதோ ஒரு ஊர்வலமோ சென்றால் நின்று பார்ப்பது , தேவை ஏதும் இல்லாத போதும் 'shopping' என்ற பெயரில் கடை வீதிக்குச் செல்வது , ஜக ஜக வென்று விளக்கு அலங்காரம் ஆர்வம் காட்டி அது என்னவென்று அறிய முற்படுவது , தெருமுனையிலோ , அரஸ மரத்தடியிலோ , திண்ணையிலோ உட்கார்ந்து அர்தம் இல்லாத அரட்டையில் நேரத்தைக் கழிப்பது , வம்புப் பேச்சில் ருசி காட்டுவது , பரபரப்பாகக் கூவி விற்கப்படும் செய்திப் பத்ரிகையை வாங்கத் துடிப்பது , தெருவில் கூட்டம் கூடி நின்றால் எட்டிப் பார்ப்பது , டீவி சேனல்களில் நடக்கும் வெற்று விவாதங்களைப் பார்த்து விட்டு அதற்கு தேஶபக்தி , பொது அறிவு என்று முலாம் பூசுவது , காலையில் எழுந்து சுறுசுறுப்பாக , உத்ஸாஹமாக இருக்க வேண்டிய நேரத்தை Newspaper படிக்கிறேன் என்ற பெயரில் சோம்பலில் கழிப்பது ...  இவை போன்ற பலப்பலவும் ரதிஹி ஜன ஸம்ஸதீ ...  ஜனக் கூட்டங்களில் ஆர்வம் காட்டுதல் ஆகும் ..  இவற்றுக்கு நேர்மாறானவை "அரதிஹி" ..

ஸம்ஸத் என்றால் லோக ஸபா , விதான் ஸபா ..  அரட்டை அரங்கம் ..  பேசுவதே அங்குத் தொழில் ..  பேசுவதே அங்கு கடமை ..  ஊரைப் பற்றி , தேஶத்தைப் பற்றிப் பேசுவது ..  உரிய சட்டங்களை இயற்றுவது ..  இதுவே இந்த ஸபைகளின் கடமை ..  அர்தமுள்ளப் பேச்சு , ஜன நலனைப் பற்றிய பேச்சு , விவாதம் , அரட்டை , வெற்றுப் பேச்சு , தாக்கிப் பேச்சு , கூச்சல் , வசை மொழி ..  பேச்சு அவரவர் ஸ்வபாவப்படி இருந்திடும் ..  ஆனால் தொண்டை தான் அங்கு முதலீடு ..  அங்கு என்ன பேசப்பட்டது , யார் யார் என்னப் பேசினார் என்று அறிய ஆர்வம் தேவை அற்றது ..  நமக்கு எந்த வகையிலும் ப்ரயோஜனம் இல்லாதது ..

இந்த ஆர்வத்தைத் தூண்டி , கூட்டத்தைக் கூட்டி , பணம் பண்ணும் தொழில்கள் பல .  கீறிப் பாம்பு சண்டைக் காட்டுதல் முதல் டீவி சேனல் வரை .  கீறிப் பாம்புச் சண்டை காட்டியவன் தெருவில் சிறிய கூட்டத்தைக் கூட்டி , சில்லறைகளை ஸம்பாதித்தான் ..  அதற்காக பலவித வார்தை ஜாலங்கள் செய்தான் ..  பத்ரிகைகள் அரை நிர்வாணப் படங்கள் , திகில் செய்திகள் , ஊர்வம்பு , பரிசுகள் , போன்ற ஜாலங்களில் ஈடுபட்டு circulation பெருக்கி லக்ஷங்களில் ஸம்பாதிக்கின்றன ..  டீவி சேனல்கள் இதையே மேலும் கவர்ச்சிக் கூட்டி , வர்ணஜாலங்கள் குழைத்து , பரிசு மழை என்று ஜனங்களை ஜொள்ளு விட வைத்து , TRP வளர்த்து , கோடிகளில் ஸம்பாதிக்கின்றன ..  ஆன்மீக ஸாதகனுக்கு இந்த ஆர்வம் அனாவஶ்யமானது ..

பிற நலன் விழைதல் என்பதை மையமாக வைத்து , அதற்கு ஏற்ப பிறர் மீது அக்கறை கொள்ளுதல் , உறவு வளர்த்திட அவஶ்யமான அளவிற்கு உரையாடுதல் , பொது நலன் , ஸேவை யில் ஈடுபட்டால் அதற்கு ஏற்ற அளவில் ஊர் நிகழ்வுகளை அறிந்து கொள்ள முற்படுதல் , என்ன வாங்க வேண்டும் என்பதைத் தெளிவாக நிர்ணயம் செய்து விட்டு கடை வீதிக்குச் செல்லுதல் , யாரை எதற்காக ஸந்திக்க வேண்டும் என்ற தெளிவான முடிவுடன் வெளியே கிளம்புதல் , என்ன அறிய வேண்டும் என்பதை நிஶ்சயம் செய்து கொண்டு அதை அறிவதற்காக லைப்ரரிக்கோ , ப்ரவசனத்திற்கோ , மற்ற கூட்டத்திற்கோ செல்லுதல் ..  தெளிவான தேடுதலுடன் டீவி சேனல் , இன்டர்நெட் ஆகியவற்றை நாடுதல் , நேரத்தைப் பற்றிய ப்ரக்ஞை , 'சும்மா' என்று வார்தையை வாழ்க்கையை விட்டு வெளியேற்றி விடல் ..  இவை ஸாதகனுக்கு நன்மை தரும் ..

Comments