Skip to main content

கீதையில் சில சொற்றொடர்கள் - 203


கீதையில் சில சொற்றொடர்கள் - 203


ममैवांशः जीवभूतः जीवलोके ..  (अध्याय १५ - श्लोक ७)
மமைவாம்ஶஹ ஜீவபூதஹ ஜீவலோகே ..  (அத்யாயம் 15 - ஶ்லோகம் 7) 
Mamaivaamshah Jeeva Bhootah Jeevaloke ..  (Chapter 15 - Shlokam 7)

அர்தம் :  லோகத்தில் உள்ள ஜீவன்கள் அனைத்தும் எனது அம்ஶமே ..

படைப்பு மற்றும் பரிணாம வளர்ச்சியைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் உண்டு ..  ஒரு மஹா ப்ரகாஶம் இருந்தது ..  அதில் இருந்து மஹா - பூதங்கள் உருவாகின ..  அவற்றில் இருந்து காலப் போக்கில் க்ரஹங்களும் அவற்றில் உயிர்களும் உருவாகின என்கிறது ஒரு கருத்து ..  வெறும் ஆகாஶம் அல்லது அண்ட வெளி இருந்தது ..  அதில் ஶப்தம் உருவானது ..  ஹிந்து புஸ்தகங்கள் அந்த ஶப்தத்தை ஓம் என்று சொல்கின்றன ..  அந்த ஶப்தத்தில் இருந்து அனைத்தும் உருவாகின ..  என்கிறது ஒரு கருத்து ..  ஹிந்து க்ரந்தங்கள் இதற்கு அப்பால் நோக்குகின்றன ..  ஸ்ரீ பரமாத்மன் அந்த ஒளி அல்லது ஒலிக்குக் காரணமாக இருக்கிறார் ..  அவரே அந்த ஒளியாக , ஶப்தமாக வெளிப்படுகிறார் ..  எனவே , அனைத்தும் அந்த ஒன்றின் அம்ஶங்களே ..  அதை ஒளியாகக் கருதினால் அந்தப் பேரொளியின் ஒரு அம்ஶம் (கீறல்) ..  அதை ஒலியாக , ஶப்தமாகக் கருதினால் அதன் ஒரு அலை ..  அதை ஆற்றலாகக் கருதினால் அந்த மஹா ஆற்றலின் ஒரு துளி ..  இதுவே ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்வது ..  அனைத்து ஜீவன்களும் எனது அம்ஶங்களே ..

வெறுமையாக ஶூந்யமாக இருந்த ஒன்று இருந்தது ..  அது விரிந்தது ..  வெடித்துச் சிதறியது ..  அந்த சிதறல்களே படைப்பில் உள்ள அனைத்தும் என்கிறது ஒரு கருத்து ..  அச்சிதறல்கள் எவ்வளவு பெரியவை ??  அல்லது எவ்வளவு சிறியவை ??  பல பத்திகள் கிடைக்கக் கூடிய கேள்வி ..  ஒரு பால் - வழி (MilkyWay) அதை விட பெரியதின் சிதறல் ..  ஒவ்வொரு ஸூர்ய குடும்பமும் அதைவிடப் பெரிய பால் - வழியின் சிதறல் ..  ஒரு க்ரஹமும் அதை விடப் பெரிய ஸூர்ய குடும்பத்தின் அம்ஶம் ..  பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரும் ஒரு மஹா - ப்ராணனின் அம்ஶம் ..  உயிரினில் இயங்கும் ஒவ்வொரு அணுவும் அந்த உயிரின் அம்ஶம் ..  அந்த அணுவிற்குள் காணப்படும் ஸூக்ஷ்ம அங்கங்கள் அந்த அணுவின் அம்ஶங்கள் ..  அவற்றைப் பிளக்க முடிந்தால் அங்கு காணப்படக்கூடிய ஶூந்யம் அல்லது வெறுமை அதனுடைய அம்ஶம் ..  ஶூந்யத்தில் இருந்து ஶூந்யம் வரை ..  ப்ருஹதின் அம்ஶம் ..  அம்ஶமாகத்தான் இருக்க முடியும் ..

ஒரு பெரிய யந்த்ரத்தில் , ஒவ்வொரு உறுப்பும் அந்த யந்திரத்தின் அம்ஶம் ஆகும் ..  தனியாக , அந்த உறுப்புக்கு எவ்வித அர்தமும் கிடையாது ..  அதற்கு எவ்வித ஆற்றலோ நோக்கமோ கிடையாது ..  உயிரற்றதாகி விடுகிறது ..  ஆனால் , யந்த்ரத்துடன் இணைந்து இருந்தால் , அது தனக்கான ஆற்றைலை ஒட்டு மொத்த ஆற்றலில் இருந்து எடுத்துக் கொள்ளும் ..  ஒட்டு மொத்த யந்திரத்தின் நோக்கத்துடன் ஒன்றி , தானும் செயலாற்றும் ..  உயிருள்ள அங்கம் ஆகி விடும் ..  அதே போல , நாம் தனித்தனியாகத் தெரிகிறோம் ..  தனித்தனி உயிர்கள் என்பதே கண் பார்வைக்குத் தெரிந்திடும் காக்ஷி ..  ஆனால் , நாம் இணைந்திருக்கிறோம் .. இணைந்த அதை இறைவன் என்று அழையுங்கள் ..  பரமாத்மன் என்று அழையுங்கள் ..  ஶக்தி , பரா ஶக்தி என்று அழையுங்கள் ..  அதனுடைய அம்ஶமே நாம் ஒவ்வொருவரும் ..  அதனில் உள்ள ஒட்டு மொத்த ஆற்றலே நம் இயக்கத்திற்குக் காரணம் ..

இந்த அறிவிப்பைச் செய்தவன் ப்ரஹ்மத்தை உணர்ந்து , ப்ரஹ்மத்துடன் ஐக்யம் ஆன ஒருவன் ..  இது ப்ரஹ்ம வாக்கு ..  ஸ்ரீ பரமாத்மனே சொல்கிறான் ..  "அனைத்து ஜீவன்களும் எனது ஒரு துளி அம்ஶமே" ..

Comments